கவிஞர் சுகிர்தராணி- Interview Part 3
Jun 13, 2008•27 min
Episode description
கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.
"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"
என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"
என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.
வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம். உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார்.
அவருடைய பேட்டி ஒலி வடிவில்...
சந்திப்பு :'அதிகாலை’ அசோக் - ராஜேந்திரன்.
For the best experience, listen in Metacast app for iOS or Android
